தந்ததாது (பாகம் 05)
கப்பல் ஓய்வறைக்கு வெளியே கூச்சலும் குழப்பமும் வலுத்தபடியே வந்தது. திடுக்கிட்டு விழித்துக்கொண்ட அனுவ்வரத், அறையை விட்டு வெளியே வந்தபோது, அம்பலவாணன் மேற்றளத்துக்கு வேகமாக ஏறிவருவதைக் கண்டார். “வந்துவிட்டோம். அதோ தென்படுவது தான் வாஸ்கோடகாமா முனை” என்று சொல்லி எதிர்ப்புறம் சுட்டிக்காட்டினான் அம்பலவாணன். ஏதோ அசம்பாவிதத்தை எதிர்பார்த்து பதறிப்போயிருந்த அனுவ்வரத் நிம்மதியுடன் திரும்பிப் பார்த்தார். கோவாவின் கரையோரம் கடலுக்குள் நீண்டிருந்த அந்த முனையை மூன்று பர்மியக் கப்பல்களும் மெல்ல நெருங்கிக் கொண்டிருந்தன. நீலவானம், வெண்ணிறப் பட்டுமணல், அதில் எறும்புகள் போல அங்குமிங்கும் ஓடித்திரியும் மனிதர்கள், அப்பால் பச்சைவிரிப்பாகப் பசுங்காடு, அங்கொன்றும் இங்கொன்றுமாக பலநாடுகளின் பெருங்கப்பல்கள் என்று கடற்கரையே மனோரம்மியமாக இருந்தது. அம்பலவாணன் மேற்றளத்தில் ஏற்கனவே கூடிநின்ற கப்பற் பணியாளர்களுடன் இணைந்து பலவித ஆணைகளை இட்டபடியே மரக்கம்பங்களில் கட்டப்பட்டிருந்த பாய்மரச்சீலைக் கயிறுகளை அசைத்துக்கொண்டிருந்தான். சில நிமிடங்களிலேயே மூன்று கப்பல்களிலும் பர்மிய மயில் கொடிகளின் அருகே வெண்ணிறக் க...