மேதியவுணன்கொல்பாவை வாழ்த்து - தமிழ் மகிடாசுரமர்த்தினி தோத்திரம்!


"அயிகிரி நந்தினி நந்திதமேதினி" என்று ஆரம்பிக்கும் மகிடாசுரமர்த்தினி தோத்திரத்தை அறியாதவர்கள் நம்மில் யாரும் இருக்கமுடியாது! கொலுவுக்கு அடுத்தபடியாக, நவராத்திரி என்றால் பலருக்கும் ஞாபகம் வருவது, மகிடாசுரனும், இந்த மகிடாசுரமர்த்தினி தோத்திரமும்தான்! அதற்குள்ள இயல்பான கவர்ச்சியும், பாடும்போதெழும் உணர்ச்சிப்பெருக்கும், ஏனைய இறைதுதிகளை விட, அதற்கு மட்டும் தனித்துவத்தை ஏற்படுத்திவைத்துள்ளது என்றால் அது மிகையல்ல. இத்துதியானது, “இராமகிருஷ்ண கவி” பாடியது என்றும், ஆதிசங்கரர் பாடியது என்றும் இருவேறு கருத்துள்ளது.




பொருள்புரியாமல் அதைப் பாடும்போதே, இத்தனை சுகமாக இருந்தால், அர்த்தம் புரிந்து தமிழில் பாடும்போது, எத்தனை சிறப்பாக இருக்கும்? அதற்காகவே, முழுக்க முழுக்க இன்தமிழில், இதோ மகிடாசுரமர்த்தினி தோத்திரம்!
“ஜயஜய ஹே மகிஷாஸுரமர்த்தினி 
ரம்யகபர்த்தினி சைலஸுதே:”
மூலப்பாடல்களில், ஏழாம் அடியில் வரும் “ஜயஜய” என்பது தமிழில் “வெல்க” என்றும் “சயசய” என்றும் வரும். (உ-ம்: “வேகங்கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க!”, “சயசய போற்றியெனும் கைதான் நெகிழவிடேன்” – திருவாசகம்.) பாடல் இயன்றவரை தமிழில் இருந்தால் அழகாக இருக்கும் என்பதற்காக, ஆரம்பத்தில் அதே “ஜயம்” எனப் பொருள்தரும் “திறல் திறலே” எனும் சொற்களால், அது பிரதியிடப்பட்டது. எனினும், “வாழி” எனும் சொல்லே இறுதியாகப் பயன்பட்டிருக்கின்றது. சிற்றாயுள் உடைய மானிடர் நாம், அப்பனுக்கும், அவள் அண்ணனுக்கும் பல்லாண்டு பாடி மகிழ்வதுபோல், நம்மை வாழவைக்கும் அன்னைக்கு, “வாழ்க வாழ்க” என்று வாழ்த்துச்சொல்லுவது என்பது, மகிழ்ச்சியையே ஏற்படுத்துகிறது, இல்லையா? :-)

மகிடம், அசுரன், மர்த்தனம் இந்த மூன்று சொற்களுக்கும் இணையான மேதி+அவுணன்+கொல்லுதல் என்ற சொற்கள் இணைந்து, “மேதியவுணன்கொல்பாவை” எனும் அழகிய தமிழ்ப்பெயர் அன்னைக்குச் சூட்டப்படுகிறது.


“ஓம் கபர்தினே நம:” இது சிவனாரின் நூற்றியெட்டு போற்றிகளில் ஒன்று. அவனது நாயகி என்பதால் அன்னைக்கு “கபர்த்தினி” என்று பெயர். இதன் பொருள், சுருண்ட அல்லது பின்னப்பட்ட தலைமுடியைக் கொண்டவள் என்பதாகும். எனவே “ரம்யகபர்த்தினி” இங்கே, “புரிகுழல் எழில் உமை” ஆகியிருக்கிறாள். (குழல்=கூந்தல்)
சைல+ஸுதா = மலைமகள்
“வாழியவே மேதியவுணன்கொல்பாவாய் 
புரிகுழலெழிலுமை மலைமகளே!”

இப்படியே பல இடங்களில், பொருத்தமான சொற்களைப் போட்டு இப்பாமாலை தொடுக்கப்பட்டுள்ளது. சிலருக்கு கடினமாக இருக்கலாமென்று எண்ணக்கூடிய தமிழ்ச்சொற்கள் தனியே குறிப்பிடப்பட்டுள்ளன.

என்னதானென்றாலும், மூல தோத்திரத்தைப் பாடும்போதெழும் தெய்விக உணர்வு, இம்மொழிபெயர்ப்பில் முழுமையாக இல்லை என்பது உண்மைதான். எனினும் பொருள்விளங்குகின்றதல்லவா? கூடவே தாய்மொழியில் பாடும்போதெழும் திருப்தியும்!

அகிலமாக, நம்மைச் சுற்றி என்றும் நிறைந்திருக்கும், அன்னைக்கு இவ்வாழ்த்தைக் கூறி, அவள் மூலம் நாமும் வாழ்க்கையில் வளம் பெறுவோம்! மகிடன் போலவே, நம் மனங்களைச் சூழ்ந்திருக்கும் மும்மலம், அறுபகை முதலான அசுர அழுக்குகள் நீங்கவேண்டும் என்று அவளைப் பிரார்த்திப்போம்!
ஓம் சக்தி! பராசக்தி!





வையம் வியந்திட வரைதனில் வந்தனை
வந்திப்ப நந்தியும் வரமருள்வாய்
பைய மிளிர்நடை பழகுவை மாலுடன்
பலர்புகழ் விந்தியம் வாழ்பவளே!
கையது தொழுதிட ககனர்கோன் பணிந்திடும்
கறைக்கண்டன் காதலி யாதும்நீயே!
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய் 
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 1
(ககனர்கோன் – இந்திரன், வரை - மலை)

அளிக்கும் அந்தரர்க்கு அழிக்கும் துர்தரற்கு
அறந்தவிர் துன்முகன் தடிந்தவளே
முழுவதும் ஆள்வாய் முக்கணன் தோழீ
மறைந்ததெம்மாயை, உன் சமரொலியில் 
இழிந்திட தனுகுலம், திதிமக நடுங்கிட
ஈனரை இழித்தனை ஆழிபெண்ணே!
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய் 
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 2
(அந்தரர் – தேவர்; தடிதல் – அழித்தல்: துர்தரன்,துன்முகன் – அன்னை அழித்த அசுரர்கள், சமர்ஒலி – யுத்தகோசம், தனுகுலம், திதிமக – தனுவின் குலமான தானவர், திதியின் மக்களான தைத்தியர்; ஆழிபெண் – கடல்மகள்,இலக்குமி.)

கடம்ப வனந்தனில் கனிந்து நகைத்தமர்
காரணி உலகுதன் நாயகியே!
கொடுமுடி இமயம் குன்றங்கள் மலர்வாய்
குவிமலர்த் தேறலின் இனியவளே
கைடபன் மதுவின் கூற்றமும் ஆனாய்
களங்களில் கூச்சலில் களிப்பவளே!
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய் 
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 3
(தேறல் – தேன்; களம் - போர்க்களம்)

தீயவர் சிரங்கள் சிதைந்தன நூறாய்
தும்பியர் துதிக்கைகள் வீழ்ந்தனவே!
கயத்தலை கிழிந்திட சமர்க்களம் நுழைந்திடும் 
கடிதரிமா தனில் இவர்பவளே!
கயவர்கள் தளபதி கரங்கொண்டு தலைபறி
கவறிட ஏதிலர் கனன்றுநின்றாய்!
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய் 
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 4
(தும்பி,கயம் – யானை; அரிமா – சிங்கம்; கவறுதல்- வருந்துதல்; ஏதிலர் – பகைவர்)

அமர்க்களம் புகுந்து அரக்கரை அழிக்கும்
அம்மையே, குறையா வீறுடையாய்!
அமலனை அறிவனை பூதங்கள் அடிபணி
அம்மைநின் தூதனாய் அமர்த்தியன்று
இமக்குலக்கொடியே கொடுமதியாளரின்
இழுக்கன்று ஒழிந்திட வழிவகுத்தாய்!
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய் 
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 5
(அமர்க்களம் – போர்க்களம், அமலன், அறிவன் – சிவன்; இழுக்கு – குற்றம்.)

பகைவர்தம் தேவியர் அபயமும் வேண்டிட
பகைவர்க்கும் அருளும் கனிமனத்தாய்!
புகையென சூழ்ந்து மூவுலகாட்டிடும்
புல்லியர் சிரந்துணி சூலங்கொண்டாய்!
தகையென திகையெங்கும் இரலைகள் இமிர்ந்திட
திமிதிமி இமிழென திறல்களும்காண்!
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய் 
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 6
(புல்லியர் – தீயவர்; தகை – பெருமை; திகை – திசை; இரலை – ஊதுகொம்பு, துந்துபி; இமிர், இமிழ் – ஒலியெழுப்புதல், ஒலி; திறல் – வெற்றி)

புகைக்கணான் கயவன் நுக்குநூறாகிட
பிணித்தனை உம் எனும் உரப்பினிலே
கூகைசேர் களத்தில் குருதியில் துளிர்க்கும்
கூடலன் கொடியோன் உயிர்குடித்தாய்
நகைசிவன்நாயகி நனைசெருக்களத்தில்
நிசும்பனை சும்பனை நறுக்கினையே
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய் 
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 7
(புகைக்கணான் – தூம்ரலோசனன் எனும் அசுரன்; நுக்குநூறு – சுக்குநூறு; உரப்பு – ஒலி; கூகைசேர்களம் – ஆந்தைகள் சேரும் போர்க்களம்; குருதியில் துளிர்க்கும் கூடலன் – இரத்தத்துளிகளில் மீண்டெழும் இரத்தபீசன் எனும் அரக்கன்; செருக்களம் – போர்க்களம்)

எடுத்தனை சிலையை எதிரிகள் சரிய
எழிலுடல் கைவளை குலுங்கிடவே
தடுத்தனை தமனியச் சரம் சிவந்தழிக்க
தரியலர் தபுகுரல் தாவியெழ
அடுத்தனை நிருதர் நாற்படை நசிய
அமர்க்கள மேடையில் ஆடினையே
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய் 
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 8

(சிலை – வில்; தமனியச்சரம் – பொன்அம்புகள்; தரியலர் – பகைவர்; தபுகுரல் – மரணஓலம்; நிருதர் – அசுரர், நாற்படை- தேர், யானை, குதிரை, காலாள் எனும் சதுரங்கப்படை)

அரம்பையர் திதிதெய் திதிதெய் தகதிமி
அவிநய நடமிட அகமகிழ்வாய்
தரங்கமெனத் துகுடத்துகுடத் கடதாகட
தாளம் குதூகலிப்பாய்
மருங்கினில் தக்கிட தகிகிடதிம்திமி
மத்தளம் தொட்டிசை கொட்டிடுதே!
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய் 
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 9
(தரங்கம் - இசையசைவு)

சயசய போற்றிகள் சகமெங்கும் ஒலித்திடும்
சகலம் உன் வெற்றியைப் புகழ்ந்திடுமே
சலசல சிலம்புகள் சதிர்நடம் பயின்றிடும்
சங்கரன் சிந்தை கவர்ந்திடுமே
சடசட ஒலியெழ திறன்மிகு பயில்வர்கள்
சதுரிட மகிழிறை பாதிநடீ!
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய் 
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 10
(சதுர் – நடனம்; இறைபாதி – இறைவனில் பாதியான அம்மை; நடி – நடனமாடும் பெண், அம்மை)



அருள் ஒழுகும் கருணை பொழியும்
இளகும் எளியார்நல் லுளம் கவரும்
மருள் அழியும் ஒளிசேர் குளிரும்
மதிபோல் முகமும் மிளிர் மாயவளே!
விழிமலர்கண்டு வண்டார்த்திடவும் - விஞ்சை 
வாழ்நரும் விமலனும் வியந்திடவே
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய் 
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 11
(விஞ்சைவாழ்நர் – தேவர், விமலன் – சிவன்)
மல்லிகை போல்வர் மல்லரைச் சமரில் 
மாய்த்திடும் களங்கண்டு மகிழ்ந்திடுவாய்!
மல்லிகைக் கொடியென மருள்வண்டு இசையன்ன
படர்ந்திடும் சேனையுன் மருங்கினிலே!
அல்லிமென் அலர்மலர் முறுவலுன் இதழ்களில்
அடியவர் போற்றிடும் கொற்றவையே!
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய் 
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 12

மதம்பொழி வாரணம் அயர்ந்து கலங்கிட
மதநடை பயின்றிடும் பேரரசி!
நிதம்கலை எழில்வளம் மூவுலகணிந்திட
நிதம்பணி இமவான் திருமகளே!
பதம்பணி அடியவர் தாபமும் மோகமும்
பலித்திட நகைபுரி மன்மதையே!
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய் 
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 13
(வாரணம் – யானை)
தாமரையிதழென மாசறு நுதலுடன்
தாயவள் தூயநல் திருவதனம் 
மாமலர்நாடும் அன்னங்கள் நாணும்
மாதுநின் ஒயில்பயில் நடையழகும்
தாமம்பூ வகுளம் தூயநல் நீலம்
தேன்நிறை குலவு வண்டார் குழலும்
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய் 
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 14
(வகுளம் – வகுளம்பூ; தாமம் – மலர்; நீலம் – நீர்நீலஅல்லி; குழல் - கூந்தல்)

குயில்பழி கரமமர்குழல் பழிகுரலில்
குவலயம் குளிர்ந்திட குழைபவளே
உயிர் உருக்கிடும் மொழி, மலைமலரடவியில்
உலவுவை புளிஞர்தம் மகளிருடன்
பயில்விளையாடலும் பாடலும் ஆடலும்
பாவையர் நல்லுளம் மகிழ்ந்திடவே
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய் 
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 15
(கரம் அமர் குழல் - கையிலேந்திய புல்லாங்குழல்; மலைமலரடவி – மலையிலுள்ள பூங்கா, புளிஞர் – புலிந்தர், வேடர்)
மதியொளி மறைத்திடும் துவண்டிடும் இடையில்
மிகுபல நிறத்துகில் மிளிர்ந்திடவும்
மதியென ஒளிர்ந்திடும் பதம்விழும் சுரசுரர்
மகுடத்து மணி விம்ப விரலுகிரும்
பதிவிக்க நாணத்தின் மத்தகம் மலைபொன் 
பெருமையின் நிமிர்ந்திட்ட கும்பதனம்
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய் 
புரிகுழல் எழிலுமை மலைமகளே! 16
(துகில் – ஆடை; உகிர் – நகம்; மத்தகம் – யானைமத்தகம்.)

அஞ்சலர் ஆயிரம் கரங்கொண்டுன் ஆயிரம் 
அழித்திட ஆயிரம் வணங்கினவே
தீஞ்சொலன் தீயோன் சூர்தடி சேயோன்
தேவர்தம் சேயோன் தாயவளே
மஞ்சனோர் சேந்தன் சுரதன்நல் வேந்தன்
மாந்தன் சமாதிக்கும் ஈந்தனையே
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய் 
புரிகுழல் எழிலுமை மலைமகளே! 17
(அஞ்சலர் – பகைவர்; தீயோன் சூர் – தீய சூரபதுமன், சேயோன் –முருகன்; மஞ்சன் – மகன்; சுரதன், சமாதி – அம்பிகை அருள்பெற்ற ஒரு மன்னனும் வணிகனும்)

கருணையின் உருவென கனிந்திடும் உனகழல்
கமலபதம்நிதம் கைதொழுதார்
திருமகள் பணிந்திட திரண்டிடும் செல்வமும்
கமலையின் உறைவிடம் ஆவரன்றே!
அருள்வடிவாயின அம்மையுன்பாதங்கள்
அடியவன் அறியேன் பரவுமாறே!
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய் 
புரிகுழல்எழிலுமை மலைமகளே! 18

மெல்லென நகரும் பொன்னனை நதிநீர்
மொண்டுநின் சன்னதி தொழுதெழுவார்
அல்லன அகற்றிடும் அருள்பொருள் போகங்கள்
அடைந்தனர் போல்வரே அன்னைநகில்
நல்லவர்நாடிடும் நாயகி வாணிநீ
நாமகளுந்தன் கழல் சரணம் 
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய்
புரிகுழலெழிலுமை மலைமகளே! 19
(நகில் – மார்பு, கழல் - பாதங்கள்)

நிலவுமுகம் நிறைதூயவகம் நினைவோடுதினம் 
நனவாய் நினையும்
நிலவுசுகம் அரர்கோனுலகம் நயவாது
நல்தோகையர் நாடும்சுகம்
மலருமுளம் மடமாதுன்னகம் மகிழாதென்னை 
சீவனில் காண்பன் சிவம்!
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய்
புரிகுழலெழிலுமை மலைமகளே! 20
(அரர்கோனுலகம் – இந்திரலோகம், தோகையர் – அரம்பையர்,)

இழிந்தவர்க்கிரங்கிடும் இளகிய உமையே
இவனு(ளு)க்கும் தயைபுரிந்தருள் தருவாய்.
குழைபவர்க்களித்திடும் மறவரை அழித்திடும் 
திறமிது என்னை, எம் உலகம்மே!
சூழ்துயர் துன்பங்கள் சுமந்திடும் சிறியேன்
சுவறிடும் தருணமிது அருள்புரியாய்!
வாழியவே மேதியவுணன்கொல்பாவாய்
புரிகுழலெழிலுமை மலைமகளே! 21
(மடுப்பாய் – அழிப்பாய், சுவறுதல் – வற்றுதல் - மறைதல்)



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

தமிழில் கலைச்சொல்லாக்கமும் அதன் செல்நெறியும் -நேற்று இன்று நாளை

கண்ணகியும் நாவலரும் – ஒரு “சைவ” முரண்!

சித்திரையே தமிழர் புத்தாண்டு!!! (பாகம் 01)